சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் போடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இம்முறை திமுக சார்பாக களமிறங்கும் அவர், தொகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில், பரிசு மழைத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே திமுகவைச் சேர்ந்த கிளைச் செயலாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும் வாக்குச்சாவடி குழுவினர்க்கு (பூத் கமிட்டி) ஐயாயிரம் ரூபாயும் வழங்கப்படுவதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில், சங்கராபுரம் பகுதியில் நடைபெற்ற வாக்குச்சாவடிக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சி நிர்வாகிகள் கூடுதல் உற்சாகம் அடையும் வகையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, போடி தொகுதியில் நகர, ஒன்றிய வாக்குச்சாவடிகளில் திமுகவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத்தரும் வாக்குச்சாவடிக் குழுப் பொறுப்பாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஓபிஎஸ் கூறினார்.
மேலும், அதிமுக வேட்பாளரைவிட கூடுதலாக ஒரு வாக்கு பெற்றுத் தந்தாலும் கூடுதல் பரிசும் தரப்படும் என்றும் வாக்குச்சாவடி குழுக்களை ஒருங்கிணைத்து அதிமுகவைவிட அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் நகர, ஒன்றியச் செயலருக்கு ஐந்து பவுன் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

