சென்னை: தமிழகத்தில் கீழடி உட்பட எட்டு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள அனுமதி வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாகரிகத்தின் தொன்மை என்பது இந்தியாவின் நாகரிகப் பண்பாட்டுக்குப் பெருமை சோ்ப்பது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலம்தான் அகழ்வாராய்ச்சிக்கு உகந்தது என்றும் இதைத் தவறவிட்டால் பருவ மழைக் காலம் தொடங்கி களப்பணிகள் தடைபடும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும், முக்கியமான ஆராய்ச்சிகள் தாமதமாகும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய தாமதத்தால் 2025-2026ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகும் என்று கவலை தெரிவித்துள்ளார்.
“கீழடி, ஆதிச்சநல்லூர், நாகப்பட்டினம் உட்பட எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசிடம் ஒப்புதல் வேண்டி தமிழக அரசு கடிதம் அனுப்பி எட்டு மாதங்கள் ஆகின்றன.
“இதற்கான முன்மொழிவுகள் கடந்த 2025 ஜூலை மாதம் அனுப்பப்பட்டன. நவம்பரில் நடைபெற்ற இந்தியத் தொல்லியல்துறை தலைவர் தலைமையிலான கூட்டத்திலும் அது எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும், அனுமதி கிடைக்கவில்லை,” என்று திரு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

