தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புயல் காலத்திலும் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

2 mins read
5e640374-62c1-45ff-9c06-f20a41c5fe1c
கனமழை பாதிப்புகள் குறித்து சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) காலை நேரில் ஆய்வு செய்தார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: “அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழை பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன. புயல் காலத்திலும் தலைநகர் சென்னை இப்போது நிம்மதியாக இருக்கிறது,” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ‘ஃபெஞ்சல்’ புயல் சனிக்கிழமை (நவம்பர் 30) நள்ளிரவில் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. புயல் உருவானதிலிருந்தே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு தொடங்கி வட கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. புதுச்சேரியிலும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை பாதிப்புகள் குறித்து சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) காலை நேரில் ஆய்வு செய்தார். கொளத்தூர் செல்வி நகரில் மக்களைச் சந்தித்து குறைகளை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “சென்னையில் வழக்கமாக மழைநீர் தேங்கும் இடங்களில் இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை. மழை பெய்யும் போது சில இடங்களில் மழைநீர் தேங்கினாலும், மழை நின்றதும் வடிந்துவிட்டது. சென்னையில் இன்னும் மழை நிற்கவில்லை. முழுமையாக மழை நின்றதும் அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிந்துவிடும்.

“விழுப்புரத்தில், மின்சாரப் பிரச்சினை உள்ளதால் அமைச்சர், அதிகாரிகளை அங்கு அனுப்பி வைத்துள்ளோம். மின்சாரத்துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர் அங்கு உள்ளனர். அதிகாரிகளும் உள்ளனர்,” என்றார்.

அப்போது, “எதிர்க்கட்சித் தலைவரின் நேற்றைய குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‘எந்தப் பிரச்சினை என்றாலும் நான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் களத்தில் இறங்கி மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறோம். ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகளை அரசு திறமையோடு கையாண்டு வருகிறது. அவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதே இல்லை. கவலைப்படுவதும் இல்லை,” என்றார்.

வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் துல்லியமாக இருக்கிறதா? என்ற கேள்விக்குப் பதில் அளித்த முதல்வர், “வானிலையை ஓரளவுக்குத்தான் கணிக்க முடியும். புயலின் வேகம் குறைந்து ஒரே இடத்தில் நிற்பதை எப்படி முன்கூட்டியே கணிப்பது? வானிலை மையம் கொடுக்கும் தகவல் அடிப்படையில்தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்