சென்னை: எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ்அபாபாவில் இருந்து இந்தியாவிற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணிகளை வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்தனர்.
அப்போது பெண் பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
முதற்கட்ட விசாரணையில், தான் கென்யாவில் இருந்து எத்தியோபியா வழியாகச் சுற்றுலா விசாவில் வந்திருப்பதாக 35 வயது மதிக்கத்தக்க அவர் குறிப்பிட்டார்.
எனினும், அதிகாரிகள் எழுப்பிய மற்ற கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
இதையடுத்து, விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அப்பெண்ணின் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது அவர் ஏராளமான கேப்ஸ்யூல் வடிவிலான மாத்திரைகளை விழுங்கி இருப்பது தெரிய வந்தது.
மருத்துவக் குழு உதவியுடன் அந்த மாத்திரைகள் வெளியில் எடுக்கப்பட்டன. பின்னர் அவற்றை உடைத்துப் பார்த்தபோது மிக உயர்தரமான கொக்கைன் போதைப்பொருள் அதில் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
70 மாத்திரைகளில் ஏறக்குறைய 850 கிராம் போதைப் பொருளை அந்த பெண் கடத்தி வந்துள்ளார். அவர் சென்னையில் யாரைச் சந்திக்க வந்தார், அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

