சென்னை: கோவையில் தேசியக் கொடியுடன் பேரணி நடத்த பாஜகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி நாராயணன், “திராவிடர் கழகத்திற்கு அனுமதி கிடையாது, பாஜகவுக்கு அனுமதி கிடையாது, தவெகவுக்கு மட்டும் அனுமதியா?” எனக் கேள்வி எழுப்பினார்.
“கோவை நகரம் பாகிஸ்தானில் அல்லது ஆப்கானிஸ்தானிலா இருக்கிறது? தேசியக் கொடியை ஏந்திப் பேரணி செல்வது பாவச் செயலா?” என்று நீதிபதி வினவினார்.
மற்ற அமைப்புகளுக்கு அனுமதி மறுத்த நிலையில், தவெக பேரணிக்கு மட்டும் அனுமதி அளித்திருந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
காவல்துறையினரின் இத்தகைய பாகுபாடான செயல்பாட்டிற்குச் சென்னை உயர் நீதிமன்றம் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டது.
கோவையில் பாஜக சார்பில் தேசியக் கொடி ஏந்திப் பேரணி நடத்தக் காவல்துறையினர் அனுமதி மறுத்ததற்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டது.
கோவையில் பாஜக பேரணி நடத்துவது குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆலோசனை நடத்திய பின்னர் அதுகுறித்த முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


