கடலூர்: கடலூர் மாவட்டம் மருந்தூர் பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வின்போது 7 சென்டி மீட்டர் நீளம் கொண்ட சங்கினாலான பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
பண்டைய தமிழர்கள் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதற்கு இது மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அகழாய்வின்போது 360 சென்டி மீட்டர் ஆழத்தில் கிடைத்துள்ள அந்தப் பொருளானது, சங்கு வளையல்கள் செய்வதற்குப் பயன்பட்டது போக மீதமுள்ள பகுதியாகும்.
இதுவரை மருந்தூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணியின்போது இரும்புப் பொருள்கள், ராஜராஜ சோழன் காலத்துச் செப்புக் காசுகள், அஞ்சன கோல், தூதுபவளம், அகேட், கண்ணாடி மணிகள், பானை ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் இந்தப் பகுதியில் சங்கு எடுக்கும் தொழில் நடைபெற்றுள்ளதையும் இப்பகுதி மக்கள் அந்த தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியதையும் அறிந்துகொள்ள முடிகிறது.
இது மிகுந்த மகிழ்ச்சியூட்டுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.