வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த அரிய சங்குப் பதக்கம்

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த அரிய சங்குப் பதக்கம்

1 mins read
97527623-a56c-4f3a-86ea-b16b669a4209
வெம்பக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட சங்கு பதக்கம். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வின்போது முதன்முறையாக சங்குப் பதக்கம் கண்டெக்கப்பட்டுள்ளது. மேலும், சுடுமண் ஆட்டக்காய்கள் உள்ளிட்ட சில அரிய பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் தமிழக தொல்லியல் துறை சார்பாக மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அங்கு இதுவரை கண்ணாடி மணிகள், அரிய கல்மணிகள், சுடுமண் பொம்மைகள், தங்கமணி, கறுப்பு சிவப்பு பானை ஓடுகள், அகல் விளக்குகள் உள்ளிட்ட தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சங்கால் செய்யப்பட்ட பதக்கங்கள் கிடைத்திருப்பது தொடர்பாக தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமது சமூக ஊடகப்பக்கத்தில் ‘வெம்பக்கோட்டை எனும் விசித்திர கோட்டை’ என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில் முதன்முறையாக இப்போதுதான் சங்கு பதக்கம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பண்டைய தமிழர்களை நோக்கிய பயணமாக வெம்பக்கோட்டை மூன்றாம் கட்ட அகழாய்வில், 24.9 சென்டி மீட்டர் நிளமும், 12.6 சென்டி மீட்டர் விட்டமும், 6.68 கிராம் எடையும் கொண்ட சங்கால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

“இந்த அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட ஆட்டக்காயும் கிடைத்துள்ளது. இதன் வடிவமாக ஒரு புறம் விலங்கின் தலைப்பகுதியும், மறுபுறம் பறவையின் தலைப்பகுதியும் காணப்படுவது வியப்பளிக்கிறது,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்