சென்னை: ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) ரத்து செய்துள்ளது.
கே.வி.என். புரொடக்ஷன் தயாரிப்பில் நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் அவரது கடைசி திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படத்துக்குத் தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.
மதம், பாதுகாப்புப் படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்தப் படத்தை மறு ஆய்வுக் குழு பரிசீலனைக்கு தணிக்கை வாரியக் குழுவினர் பரிந்துரை செய்தனர்.
இதை எதிர்த்து கே.வி.என். நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழை வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை எதிர்த்துத் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடையும் பெற்றது.
மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த விசாரித்த நீதிபதிகள் ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், தனி நீதிபதி பி.டி ஆஷாயின் உத்தரவை ரத்து செய்துள்ளனர்.
“உரிய விளக்கம் அளிக்கத் தணிக்கை வாரியத்திற்கு அவகாசம் வழங்கவில்லை. படத்தில் சில காட்சிகள் சமூகத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது,” என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
வழக்கை விரைவாக மீண்டும் விசாரித்து புதிய உத்தரவு பிறப்பிக்கத் தனி நீதிபதி பி.டி ஆஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை நாடுவது குறித்து ஜனநாயகன் தயாரிப்பாளர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதால் அதன் வெளியீடு மேலும் தள்ளிப் போகும் சூழல் எழுந்துள்ளது.

