சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.67,452 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.
சென்னை, கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடைபெற்ற மாநாட்டிற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமை தாங்கினார்.
தமிழகத்தில் ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் மொத்தம் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
“மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் முதலீட்டுக்கான மிகவும் நம்பகமான மாநிலமாக முதலிடத்தில் திகழ்கிறது. நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளும் 21 நாள்களுக்குள் விரைவாக வழங்கப்படுகின்றன. திறமையான மனித வளம் மாநிலத்தில் மிகுதியாக உள்ளது,” என்று மாநாட்டில் உரையாற்றிய தொழிற்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா கூறினார்.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், வேலைவாய்ப்பிற்காக எவரும் சொந்த ஊரை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பதே அரசின் நோக்கம் என்றார் அவர்.
வரும் 2036ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தை US$1.5 டிரில்லியன் பொருளியலாக உயர்த்தும் இலக்கை நோக்கி அரசு பயணிப்பதாகவும், இந்த ‘வெற்றித் தமிழ்நாடு 2026’ மாநாடு மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் எஸ்.கீர்த்தனா தெரிவித்தார்.


