தஞ்சாவூர்: தவெகவின் தேர்தல் வாக்குறுதியின்படி, பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் தமிழக விவசாயிகள் பெற்றுள்ள ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) அறிவித்தார். இதையடுத்து பல்வேறு தரப்புகளிடம் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.
“பயிர்க்கடன் அறிவிப்பு கடல் நீரில் பெருங்காயத்தைக் கரைப்பது போன்ற செயலாகும். தமிழக முதல்வரின் கடன் தள்ளுபடி அறிவிப்பும் ஏமாற்றும் வகையில் உள்ளது. எனவே வாக்குறுதிப்படி கடன் முழுமையும் தள்ளுபடி செய்யவேண்டும்,” என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கே.வி.இளங்கீரன் கூறினார்.
“முழுமையாகத் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் மாநிலக் கூட்டுறவுப் பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜூன் 22ஆம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்,” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தெரிவித்துள்ளார்.
“சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்,” என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
“தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியின்படி 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ளவர்களின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாமல் ரூ.50,000, ரூ.75,000 எனக் கடன் வரம்பைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்துவது கடும் கண்டனத்துக்குரியது,” எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
“கூட்டுறவு வங்கிகளில் சிறு விவசாயிகள் வாங்கிய கடன் அதிகமாக உள்ளது. அதை முழுமையாகத் தள்ளுபடி செய்தால் மட்டும்தான் அவர்களுக்குப் பயன் கிட்டும்,” என்று பாமக தலைவர் அன்புமணி குறிப்பிட்டார்.

