சென்னை: தமிழகம் முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள ஏறத்தாழ 76,000 தாய்மார்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ’ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தை ஐ.நா.மன்றம் பாராட்டி விருது அளித்துள்ளது என்றும் அந்த அளவுக்கு இத்திட்டம் தமிழக அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
“ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. அதே போல் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்து பெட்டகங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
“இதுவரை இரண்டு கோடி பேருக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இரண்டு கோடியே முதலாவது பயனாளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்க உள்ளார்,” என்றார் மா.சுப்பிரமணியன்.

