சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக எதிர்பாராமல் இணைந்தது தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வலுவான கூட்டணி அமைத்திருந்தாலும் அதை மேலும் பலப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 7 தொகுதிகளும் 1 நாடாளுமன்ற மேலவை இடமும் வழங்க உறுதியளிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.
இருந்தாலும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 20 தொகுதிகளை தேமுதிக, திமுக தலைமையிடம் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதில் இருந்து ஏழு தொகுதிகளை திமுக வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுக தலைமையிடம் தேமுதிக கொடுத்த 20 தொகுதிகளின் பட்டியலில் கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கே.வி.குப்பம் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகியவை இடம்பெற்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வருகின்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தம் கணவர் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற விருத்தாசலத்தில் களம் இறங்கலாம் என்று திட்டமிட்டுள்ளாராம்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், திமுக தலைமையோ, பிரேமலதா விஜயகாந்தை சென்னையில் களம் இறங்குமாறு திமுக பரிந்துரைப்பதாகச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட திமுக பரிந்துரைப்பதாகக் கூறப்படுகிறது.
அந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட வாய்ப்பு இருப்பதால் அவரை எதிர்க்க பிரேமலதாதான் சரியான ஆள் என்று திமுக தலைமை கருதுகிறதாம்.
அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கவும் பிரேமலதா விஜயகாந்தியிடம் திமுக தலைமை கூறியுள்ளதாம்.

