சென்னை: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய், மக்கள் நலன் காப்பதற்கான அரசாக செயல்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாமக முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்திருப்பது எந்தக் கட்சியாக இருந்தாலும், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நோக்கமும் எதிர்பார்ப்பும் ஒன்றுதான். எந்த வகையான போதைப்பொருள் இல்லாத, பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய சூழலும் அமைய வேண்டும்,” என்று அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
இளையர்களுக்குத் தரமான கல்வியும் வேலை வாய்ப்பும் வழங்கக்கூடிய, உழவர்களின் வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தக் கூடிய, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் கூடிய, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய, இவை அனைத்துக்கும் மேலாக சமூக நீதியைப் பாதுகாக்கக் கூடிய அரசு அமைய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புதிய அரசு தீவிரமாக முயல வேண்டும். தவெகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முதல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஆணையில் புதிய முதல்வர் முதல் கையெழுத்திட வேண்டும்.
“புதிய அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலும் அந்தத் தவற்றைத் திருத்துவதற்கான பொறுப்புள்ள, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக பாமக செயல்படும் என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

