தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிக்க வேண்டாம்: ஸ்டாலின்

2 mins read
5773f8e1-9d1d-43ca-b165-080fcdcecfa1
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ் நாட்டுக்கு நிதி இல்லை என்று மத்திய அரசு மிரட்டல் விடுத்து வருகிறது. இது போன்ற மத்திய அரசின் அராஜகத்தைத் தமிழர்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளவே மாட்டார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு மாநிலங்களில் திணிக்க நினைக்கும் இந்தச் சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருப்பதைப் போல மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு என்று அந்தக் கல்வி அமைச்சரால் கூறமுடியுமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி. அதற்கு ஒன்றிய அரசு மட்டும் முதலாளியாகிவிட முடியாது.

“மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் வரை தமிழ் நாட்டுக்கு நிதி இல்லை” என்று மத்திய அரசு கூறிவருவதை தமிழ் நாட்டினர் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

“எங்கள் உரிமையைத் தான் கேட்கிறோம். உங்களுடைய தனிப்பட்ட சொத்துகளை எழுதிக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்,” என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் சேராத தமிழகம் உட்பட மாநிலங்களுக்கு ‘எஸ்எஸ்ஏ’ நிதியை மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் நிறுத்திவிட்டது.

அந்த வகையில் ‘எஸ்எஸ்ஏ’ திட்டத்தின் 2023-24 கல்வியாண்டின் 4-ம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 கல்வியாண்டின் நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசால் இன்னும் விடுவிக்கப்படாததால் மாநில அரசுகளுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் தமிழகத்துக்கு எஸ்எஸ்ஏ நிதி ஒதுக்காதது குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது, அதற்குப் பதில் அளித்த அமைச்சர் பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அதனால் விதிமுறைகளின்படி எங்களால் நிதி ஒதுக்க முடியாது.

தேசிய கல்விக் கொள்கையை மற்ற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழகம் மட்டும் அதற்கு மறுப்பு தெரிவிப்பது சரியானதல்ல.

முதலில் கல்விக் கொள்கையை ஏற்பதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டது. அதன்பின் அரசியல் காரணங்களுக்காக ஏற்க மறுக்கிறார்கள். இது அவர்களின் தவறு. இதில் தமிழக அரசுதான் அரசியல் செய்கிறது.

தமிழக வளர்ச்சியின் மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லை. தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழி திட்டம் உள்ளது. அதையேற்று தமிழ், ஆங்கிலத்துடன், கன்னடம் உட்பட ஏதேனும் ஒரு இந்திய மொழியைக் கற்பதில் என்ன தவறு உள்ளது என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்