கோவை: கோழிக்கோடு செல்லவிருந்த துபாய் விமானம் ஒன்று, கோவையில் தரையிறங்கியதால் திடீர் பரபரப்பு நிலவியது.
துபாயில் இருந்து கேரள மாநிலம், கோழிக்கோடு நகருக்கு இயக்கப்பட்ட ‘ப்ளை துபாய்’ விமானம் திடீரென கோவை விமான நிலையத்தில் தரையிறங்கியதால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.
முன்னதாக கோழிக்கோடு அருகே அந்த விமானம் வானில் அரைமணி நேரம் வட்டமடித்ததால் பயணிகள் மத்தியில் பீதி நிலவியது.
சென்னையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் சக்கரங்கள் சரியாக உள்ளிழுக்கப்படாததால் சுமார் இரண்டரை மணி நேரம் அது வானில் வட்டமடிக்க நேர்ந்தது.
வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பாக ‘ப்ளை துபாய்’ விமானத்தில் வந்த பயணிகளுக்கு விவரம் தெரிந்திருந்தபடியால் அவர்கள் மேலும் கவலை அடைந்தனர்.
எனினும், மோசமான வானிலை காரணமாகவே கோழிக்கோட்டில் ‘ப்ளை துபாய்’ விமானத்தால் தரையிறங்க முடியவில்லை என்பதை அறிந்து அந்த விமானத்தில் இருந்த 164 பயணிகளும் நிம்மதி அடைந்தனர்.
சனிக்கிழமை காலை 7.45 மணியளவில் அந்த விமானம் கோவையில் தரையிறங்கியது. விமான நிலையத்தில் பயணிகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படும் என்று விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

