சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய விவகாரத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கும் அவரது குடும்பத்திற்கும் சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ் ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரூ.89.19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஒப்புதல் பெறாமல் வெளிநாட்டு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் விதிமீறல் நடந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவு ஆகஸ்ட் 26ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது என அமலாக்கத்துறையின் அறிக்கை தெரிவித்து உள்ளது.
விதிமீறல், முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதி திமுக எம்பியுமான 76 வயது ஜெகத்ரட்சகன் 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள ஒரு ஷெல் நிறுவனத்தில் ரூ. 42 கோடிக்கு முதலீடு செய்து, சிங்கப்பூர் வெளிநாட்டுப் பங்குகளைப் பெற்று, பின்னர் அதனை சட்டவிரோதமாக குடும்ப உறுப்பினர்களுக்கு மாற்றியது தொடர்பானது. மேலும் இலங்கை நிறுவனத்தில் செய்யப்பட்ட 9 கோடி ரூபாய் முதலீடும் அபராத விதிப்பின்போது கவனத்தில்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
பரிவர்த்தனைகள் மத்திய வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்ததாக குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை,ஜெகத்ரட்சகன், அவரது உறவினர்களின் இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் சோதனை நடத்தியது.