சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் விழிப்புணர்வை அதிகரிக்கவும் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஸ்வீப்’ திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுப் பணிகள் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
நேர்மையான மற்றும் தார்மீக அடிப்படையிலான வாக்களிப்பை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இதற்காக மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், தொகுதி அளவிலான அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதன்படி, தமிழ்நாடு முழுவதும் தற்போது வரை 1,486 பெரிய அளவிலான நிகழ்ச்சிகள், 22,130 சிறிய அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கி, தேர்தல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்வதே இந்த முன்னெடுப்பு நிகழ்வுகளின் இலக்காகும்.

