சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ளது.
ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத் (திமுக) தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்குகிறார்.
திருவாரூரில் தனது பிரசாரப் பயணத்தைத் தமிழக முதல்வர் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநிலம் முழுவதும் சென்று தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபடவுள்ள அவர், ஏப்ரல் 21ஆம் தேதி தான் போட்டியிடும் தொகுதியான கொளத்தூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
இதனிடையே, ஏப்ரல் 6ஆம் தேதி திரு ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தனது தொகுதிப் பங்கீட்டைப் பெரும்பாலும் இறுதி செய்துள்ளது. கிட்டத்தட்ட 168 தொகுதிகளில் திமுக களம் காணும் எனக் கூறப்பட்டது.
அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையை திருச்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் வெளியிடும் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

