சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வாக்காளர்களுக்கு ரூ.8,000 ரொக்கச் சீட்டுகளை விநியோகித்ததாக திமுகவினர் மீது கடந்த வாரம் அதிமுகவினரும் பாஜகவினரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
அந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில், செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திமுகவினரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
பெரும்பாலான தொகுதிகளில் திமுகவினர் ரூ. 8 ஆயிரத்துக்கான பற்றுச்சீட்டுகளை, தேர்தல் நடத்தை விதிகளை மீறி சட்டவிரோதமாக விநியோகித்து வருவதாகக் கூறி, அதிமுக வழக்கறிஞரணித் துணைச் செயலாளரான ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்தப் புகாரில், “கோவை தெற்கு, பர்கூர், பாலக்கோடு, அண்ணாநகர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் வாக்காளர்களை ஏமாற்றும் வகையில் ரூ. 8 ஆயிரத்துக்கான பற்றுச் சீட்டுகளை வழங்கி தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலினின் புகைப்படம் மற்றும் வரிசை எண்ணுடன் கூடிய இந்தச் சீட்டுகளை சில தொகுதிகளில் வேட்பாளர்களே நேரடியாக வாக்காளர்களுக்கு விநியோகித்து வருகின்றனர். இது தொடர்பாக, ஆதாரங்களுடன் புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட திமுக வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், விநியோகிக்கப்பட்ட பரிசுக் கூப்பன்களை பறிமுதல் செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

