கரூர்: தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தில் போதுமான பாதுகாப்பு வழங்க காவல்துறை தவறிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
விஜய் பிரசாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டதாகவும் அதனால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்றும் அவர் கரூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
தவெக இதற்கு முன்பு மேற்கொண்ட நான்கு பிரசாரக் கூட்டங்களை ஆய்வு செய்து காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும் என்றும் ஆளுங்கட்சிக்கு மட்டுமே காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்குகிறது என்றும் பழனிசாமி சாடினார்.
“பிரசாரக் கூட்டங்களுக்கு இடையே ‘ஆம்புலன்ஸ்’ வாகனங்கள் அடிக்கடி வருவது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதுகுறித்தும் விசாரிக்க வேண்டும்,” என்றார் பழனிசாமி.
இதனிடையே, அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விஜய் பிரசாரம் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, பிரசாரம் மேற்கொள்ளும் வேளையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மேலும், தன் கட்சித் தொண்டர்களை தலைவர்தான் ஒழுங்குபடுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்குள் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.