தென்காசி: வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் நவம்பர் 16ஆம் தேதி காலை முதல் பரவலாகக் கனமழை பெய்தது. இதனால் முக்கிய நீரோடைகள், நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வரத் தொடங்கியது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தளமாகக் கருதப்பட்டு வரும் குற்றால அருவிகளில் சனிக்கிழமை மாலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் நடைப் பகுதிகள் மற்றும் கார் நிறுத்துமிடம் வரையில் தண்ணீர் வழிந்து ஓடியது.
அதேபோன்று பிரதான அருவியிலும் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்தது. இதனால் கயிறுகளைக் கட்டி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்ததால் அங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு சனிக்கிழமை மாலை முதல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நவம்பர் 17ஆம் தேதி காலையில் பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்து நீர்வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
நவம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் குளித்து மகிழ்ந்தனர்.
பிரதான அருவியில் மட்டும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் அங்கு குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.