மதுரை: தீபாவளிக் கொண்டாட்டத்தில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட காயங்கள் காரணமாக மருத்துவமனைகளில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட்டது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.
பண்டிகை தொடங்கும் முன்னரே தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்கான பல வழிகாட்டுதல்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஆனாலும் வழிகாட்டுதல்களை மீறி பட்டாசு வெடித்த போது பல்வேறு விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தன.
தென் மாவட்டங்களில் அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை பட்டாசு வெடித்த போது 300க்கும் மேற்பட்டோருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில் 10க்கும் மேற்பட்டோருக்கு கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நான்கு குழந்தைகளுக்குக் கண்பார்வை முற்றிலும் பறிபோனதாக பிரபல தனியார் மருத்துவமனை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.