சென்னை: மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைதாகினர்.
பஞ்சாப்பில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி, வேளாண் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத மத்திய அரசைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக, சென்னை, உசிலம்பட்டி, மயிலாடுதுறை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மார்ச் 23ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஒன்றுகூடிய விவசாயிகள், மறியல் போராட்டத்தில் ஈடுபட தயாரானபோது, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து, 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைதாகினர்.