பல்லடம்: மத்திய அரசின் கெயில் நிறுவனம் கடந்த 2011ல் கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கர்நாடக மாநிலம். பெங்களூருக்கு தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள விவசாய விளைநிலங்கள் வழியாக எரிகாற்றுக் குழாய் அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
இதையடுத்து பல இடங்களில் விவசாய நிலத்திற்குள் எரிகாற்றுக் குழாய் பதிக்கப்பட்டது. இது குறித்து தாமதமாக விழிப்புணர்வு பெற்ற விவசாயிகள் எரிகாற்றுக் குழாய் திட்டத்தை விளை நிலங்களில் அமைக்கக்கூடாது எனக் கூறி தொடர்ந்து கடும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கெயில் திட்டத்தைச் சாலையோரமாக மட்டுமே அமைக்க வேண்டும் என அறிவித்தார். தற்போது கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் ஏற்கெனவே பதிக்கப்பட்ட குழாய்களுடன் மீண்டும் புதிதாக எரிகாற்றுக் குழாய்களைக் கெயில் நிறுவனம் அமைத்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தை அடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் எரிவாயுக் குழாய்களைப் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்தும் விவசாய நிலங்களில் எக்காரணம் கொண்டும் எரிகாற்றுக் குழாய்களை அமைக்கக்கூடாது, கெயில் திட்டத்தைச் சாலையோரமாகச் செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராமத்தில்100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சனிக்கிழமை நவம்பர் 23ஆம் தேதி காலை ஒன்று திரண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

