சிவகங்கை: தமிழர்களின் தொன்மையை உலகறியச் செய்த கீழடியில் நடந்துவரும் பத்தாம் கட்ட அகழாய்வில் அழகிய வண்ணம் தீட்டிய பானை கிடைத்துள்ளது.
பத்தாம் கட்ட அகழாய்வில் இதுவரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சுடுமண் பானைகள் அதிக அளவில் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், அங்கு வண்ணம் தீட்டிய பானைகளும் வண்ணம் தீட்டப்படாப் பானைகளும் கிடைத்துள்ளன.
வண்ணம் தீட்டிய பானைகளில் ஒரே ஒரு பானையைத் தவிர மற்ற பானைகளைப் பழங்கால மக்கள் கலைநயத்துடன் வடிவமைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
ஒரு பானையின் வெளிப்புறத்தில், மேற்புறம் இரண்டு வட்டக் கோடுகளும் கீழ்ப்புறம் மூன்று வட்டக் கோடுகளும் காணப்படுகின்றன. நடுப்பகுதியில் மூன்று வட்டக் கோடுகளின் நடுவே இலைகள் வரையப்பட்டுள்ளபடி ஒரு பானையும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் முத்திரைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், பானைகளிலும் அச்சுகளைக் கொண்டு வரைந்திருக்கலாம் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அகழாய்வில் கிடைத்த ஒரு சில பானைகள் அடர்சிவப்பு வண்ணத்தில் இருப்பதால், முக்கியமான பொருள்களை வைக்க அவற்றைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.