விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணியின்போது தங்கத்தால் செய்யப்பட்ட மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்து 3ஆம் கட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெம்பக்கோட்டை அகழாய்வின்போது ஏற்கெனவே பல்வேறு அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் மூலம் அப்பகுதியில் வணிகம் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறினர்.
இந்நிலையில், அண்மைய அகழாய்வின் போது, 2.04 மீட்டர் ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
“தங்கத்தால் ஆன இந்த மணி, 6 மி.மீட்டர் சுற்றளவும் 4.7 மி.மீ. கணமும், 22 மில்லி கிராம் எடையும் கொண்டதாக உள்ளது.
“இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட ஏழு தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.