சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் ரூ.360 கோடியில் நீர்த்தேக்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தத் திட்டத்திற்கு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மாமல்லபுரம் சாலை ஆகியவற்றுக்கு இடையே முட்டுக்காடு முகத்துவாரத்தில் இருந்து மாமல்லபுரம் வரை 3,010 ஏக்கர் பரப்பளவில் ரூ.360 கோடியில் 1.6 டிஎம்சி வெள்ள நீரைச் சேமிக்கும் வகையில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைய உள்ளது.
இந்த நீர்த்தேக்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, திங்கட்கிழமை (ஜனவரி 19) மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலியில் நடைபெற்றது.
இதற்கிடையே, “உப்புநீர் சூழ்ந்த பகுதி, பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை மாற்றி அமைப்பதால் மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்படும்.
“இயற்கைச் சூழல் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படும். கோவளம் முதல் கொக்கில மேடு வரை (கிட்டத்தட்ட 35 கிலோமீட்டர்) இத்திட்டத்தை செயல்படுத்தும் போது, மீன்பிடித் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படும்,” எனப் பல்வேறு மீனவர் அமைப்புகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
“மழை, புயல், வெள்ளம் வரும் காலங்களில் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாதபோது இந்த உபவடி நிலப் பரப்பில் இறால், நண்டு, மீன் ஆகியவற்றைப் பிடித்து பிழைப்பை நடத்தி வருவதால் இத்திட்டத்தினை மறுபரிசீலனை செய்யவேண்டும்,” என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீனவர் அமைப்பு பிரதிநிதிகளுடன் சமாதானக் கூட்டம் ஒன்றும் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தி.சினேகா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும், இந்தத் திட்டத்தினால், கடல் மீன்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

