அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி வகித்தபோது, ஜிபிஎஸ் கருவிகள் வாங்குவதில் ஊழல் முறைகேடு நடந்ததாகவும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து விசாரணை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை, விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது.
மேலும், கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி நிலத்தை அபகரிக்க முயன்றதாக விஜயபாஸ்கர், செல்வராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் விஜயபாஸ்கர், செல்வராஜ் உள்ளிட்டோரை கரூரில் சிபிசிஐடி காவல்துறை கைது செய்தது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஜயபாஸ்கர் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் தாக்கல் செய்த முன்பிணை மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து சேகரை திங்கட்கிழமை (செப்டம்பர் 2) சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

