திருச்சி: காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக பெங்களூரிலிருந்து தனி விமானம் மூலம் அவர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) திருச்சி சென்றார். அப்போது, செய்தியாளர்களிடம் தேவகவுடா பேசினார்.
“பெங்களூரூவில் மட்டும் 1.40 கோடி மக்கள் வசிக்கின்றனர். அங்கு அனைவருக்கும் முழுமையான குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். இதில் ஒளிவுமறைவு எதுவும் இல்லை. அனைவரும் அறிந்தது தான். இது தமிழகத்தில் ஆளும் கட்சிகளுக்கு தெரியும். கர்நாடகத்தில் உள்ள பெங்களூரூ உள்ளிட்ட 9 மாவட்ட மக்கள் குடிநீருக்காக கஷ்டப்பட்டு வருகின்றனர். காவிரிப் பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும், அந்த நாள் விரைவில் வரும். அப்போது இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும்,” என்றார் அவர்

