காரைக்குடி: அரசுப் பள்ளி மாணவர்கள் வடிவமைத்த சிறிய ரக செயற்கைக்கோள் ஒன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவர்கள் 13 பேர் கொண்ட குழுவை அமைத்து ’விக்கோ சாட்-1’ என்ற செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளனர்.
இதற்காக அம்மாணவர் குழு, ஆறு மாதங்கள் கடுமையாக உழைத்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இந்தச் செயற்கைக்கோளை பலூன் மூலம் விண்ணில் ஏவ மாணவர்கள் முடிவு செய்தனர்.
இதற்கான நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) பள்ளியில் உள்ள விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார்.
பலூன் மூலம் ஏவப்பட்ட செயற்கைக்கோள் பூமியில் இருந்து 25 கிலோ மீட்டர் உயரத்தை சென்றடைந்தது. காற்றில் உள்ள பூஞ்சையை கண்டறிய இந்த செயற்கைக்கோள் உதவும் என்றும், காற்றின் தன்மையை அறிந்து விவசாயிகள் தங்கள் பயிர்களை காத்துக் கொள்ளலாம் என்றும் ஆய்வுக் குழு மாணவர்களில் ஒருவரான விஷ்ணு தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் இந்தச் சாதனை முயற்சியை இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சமூக ஊடகத்தில் காணொளி வெளியிட்டுப் பாராட்டியுள்ளார்.

