சென்னை: தமிழ் நாட்டில் வருவாயைப் பெருக்குவதற்கு மக்கள்மீது அதிகச் சுமையை ஏற்றாமல், அரசாங்கம் மாற்றுவழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கனிம வளங்களைத் தமிழக அரசே வெட்டி எடுத்து விற்பனை செய்யவேண்டும். அதன்மூலமாக அரசு பெரும் வருவாயை ஈட்ட முடியும் எனப் பல நாள்களாக கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.
மணல், கிரானைட், கருங்கல் போன்ற கனிம வளங்களைத் தமிழக அரசாங்கமே நேரடியாக வெட்டி எடுத்து விற்பனை செய்வதன் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும். இந்தப் புதிய வாய்ப்புகள் குறித்து அரசு யோசிக்கவேண்டும்.
“மக்கள் மீது சுமைகளை ஏற்றாமல் அரசுக்கான வருவாயைத் திரட்டுவது எப்படி என்பதை அரசு சிந்திக்க வேண்டும். ஆளுநர் உரையிலும் இது தொடர்பாகத்தான் தமிழக அரசு ஆளுநர் வாசித்த உரையில் குறிப்பிட்டிருந்தது,” என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் பல்வேறு வழிகளிலும் மடைமாறிய அரசு வருவாயை இனி கருவூலத்திற்குக் கொண்டு வருவோம் என இப்போது கூறியுள்ளார்கள். ஆனால், எந்த வகையில் என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இது குறித்து நிதிநிலை அறிக்கையில் தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
மேலும், பல்வேறு குற்றங்களுக்கும் அடிப்படைக் காரணமாக போதைக் கலாசாரம் இருந்து வருகிறது. எனவே, அதற்கு இந்த அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அப்போதுதான், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட பல குற்றங்களையும் தடுக்க முடியும் என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.

