ஆளுநரின் அறிக்கை உண்மைக்குப் புறம்பானது: அமைச்சர் ரகுபதி

2 mins read
f612c691-b3cd-49cd-ac84-86056bd059c8
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.  - படம்: நியூஸ்7தமிழ்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதே மரபு. தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று ஆளுநர் கூறி வருகிறார். தேசிய கீதத்துடன் சட்டசபை தொடங்க வேண்டும் என்று ஆளுநர் ரவி, தமிழ் நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்காமல் வெளிநடப்புச் செய்தார் என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

“வெளிநடப்புச் செய்த ஆளுநர் ரவி, மக்கள் மாளிகையில் இருந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தான் உரையைத் தொடங்கும்போது ‘மைக்’ அணைக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் எந்த மைக்கும் அணைக்கப்படவில்லை. அணைக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை,” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

“தமிழ் நாடு அரசுக்கு எதிராக பொய்யான கருத்துகளை ஆளுநர் வெளியிட்டுள்ளார். தமிழக அரசு வெளிநாட்டு முதலீட்டில் தமிழகம் 6 வது இடத்துக்குச் சென்றுவிட்டதாக ஆளுநர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால், 11.9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி கண்ட மாநிலம் தமிழகம் என்று மத்திய அரசே தெரிவித்துள்ளது.

“வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி குறித்து ஆளுநர் கூறியது முற்றிலும் பொய்யான கருத்து என்பதை மத்திய அரசின் அறிக்கைகளே தெரிவிக்கிறது.

“ஆளுநர் வெளியேறியவுடன் மக்கள் மாளிகையில் இருந்து அறிக்கை வெளியாகிறது என்றால் முன்பே தயாரித்து வைத்துவிட்டு தான் செயல்படுகிறார்கள்.

“தமிழகத்தில் போதைப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. வெளி மாநிலங்களில் இருந்துதான் வருகின்றது. அதனைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ற கேள்வி எழுகிறது. தமிழக எல்லைகளில் காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு போதைப் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர். போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன் முதல்வர் தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார்,” என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

“மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்கு வந்து சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடப்படுவது மரபு என்று தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அவரிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம். ஆனாலும், அவர் அதனை ஏற்க மறுக்கிறார்”, என்று கூறினார் அமைச்சர் ரகுபதி.

2024, 2025 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபையின் முதல் கூட்டத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதுபோல் இந்த ஆண்டும் நடந்து கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி

இந்நிலையில், ஆளுநர் வெளிநடப்புச் செய்ததோடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் வெளிநடப்புச் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தவறான உரையை வாசிக்க மாட்டேன் என ஆளுநர் சொல்வது நியாயம். தனது தவற்றை அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆளுநர் மீது தவறான பிம்பத்தை உருவாக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய கீதம் தொடர்பாக ஆளுநர் கூறியதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்