சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை, கடற்கரைப் பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகளை ஜூன் 14ஆம் தேதிக்குள் முழுமையாக அகற்ற மாநகராட்சி ஆணையர் தலைமையில் குழு அமைத்து, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
சென்னை காசிமேட்டில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் 2,000 விசைப் படகுகள், 7,700 ‘ஃபைபர்’ படகுகள், 500 கட்டுமரங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடற்கரைப் பகுதிகளில் நெகிழிக் கழிவுகள் அதிகப்படியாக தேங்குவதால் கடல்வாழ் உயிரினங்களுடன் ஒட்டுமொத்தக் கடலோரச் சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பசுமைத் தீர்ப்பாயம் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியது.
கடற்கரைப் பகுதிகளில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் தெர்மகோல் பெட்டிகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து, அடையாறு, கூவம் ஆறுகளில் இவை கொட்டப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்தியது குறித்து மாநகராட்சி ஆணையர் தலைமையிலான குழு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

