சென்னை: தீபாவளிப் பண்டிகையின்போது போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரத்து செய்து இலவசப் பயணத்தை அனுமதிக்கலாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளியைக் கொண்டாட சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வோரின் வசதிக்காக மூன்று நாள்களுக்கு மொத்தம் 11,000க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் போன்றவை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளியையொட்டி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வெளியூர் செல்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் சுங்கச் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் அதனால் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்படுவதும் வழக்கம்.
எனவே, பண்டிகையின்போது சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் இந்தியாவின் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் தமிழக அரசும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை மண்டலத் தலைமையகத்திலிருந்து சுங்கச்சாவடி மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.