சேலம்: தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 23) காலை 7 மணிக்கு அமைதியான முறையில் தொடங்கியது.
முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை, எஸ்ஐஇடி கல்லூரி வளாகத்தில் வாக்களித்தார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் வாக்களித்தனர்.
பின்னர் ஊடகங்களிடம் பேசிய ஸ்டாலின், “தமிழ்நாடு வெல்லும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் தாம் 100 விழுக்காடு முழுமையான நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
நீலாங்கரையில் சீமான், விஜய் வாக்களிப்பு
நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோர் வாக்குகளைச் செலுத்தினர்.
ஒரே பகுதியில் இரு முக்கிய ஆளுமைகளும் வாக்களிக்க வந்ததால், அங்கு பெரும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிலவியது.
“தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஒரு நாட்டின் ஜனநாயக அமைப்பிற்குச் செய்யும் துரோகம். கற்றறிந்தவர்கள்தான் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்ட வேண்டும்,” என்ற சீமான், “கொலை செய்வதும் சொத்து சேர்த்துக் கணக்கு காட்டாமல் இருப்பதும் எந்தளவுக்குக் குற்றமோ, அதேபோல் வாக்களிக்காமல் இருப்பதும் ஒரு குற்றம்தான்,” என்றார்.
வேட்பாளாரக முதல் தேர்தலைச் சந்திக்கும் நடிகர் விஜய், வாக்குச்சாவடிக்குக் காலை 8:30 மணி அளவில் சென்றிருந்தார். அவரது வருகையால் அங்குப் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ரசிகர்கள், தொண்டர்களின் வருகையால் வாக்குச்சாவடி வளாகமே நிலைகுத்தியது. கூட்ட நெரிசலில் அங்கிருந்த பந்தலின் கம்புகள் சரிந்து விழுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
தமிழக பாஜக தலைவரும், சாத்தூர் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் பாளையங்கோட்டையில் வாக்களித்தார்.
பின்னர் அவர் பேசுகையில், “இத்தேர்தலில் விஜய்யின் தாக்கம் இருக்காது; தேர்தலுக்குப் பின் அவரது கட்சி நீடிக்குமா என்பதே சந்தேகம். பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி” என்று தெரிவித்தார்.
விஜய் வாக்களிப்பதற்காக பூத் எண்கள் 282, 283ல் கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு இதர வாக்காளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.
சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, தனது மகன்களுடன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தேமுதிக 10 இடங்களில் போட்டியிடுகிறது. மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கப் போவது உறுதி,” என்றார்.

