சென்னை: அதிமுகவை தோழமைக் கட்சியாக கருதுவதாகவும் அதனால்தான் அவர்களது கூட்டணி குறித்து தாம் விமர்சிப்பதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் இருந்து தாம் வெளியேறியபோது, ‘தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க’ என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தம்மை வாழ்த்தியதாகக் குறிப்பிட்டார்.
“களத்தில் நான் ஜெயலலிதாவின் தம்பியாக பணியாற்றியது அதிமுக தலைவர்களுக்குத் தெரியும். பாஜகவால் அதிமுகவுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பழனிசாமி அறியாமல் இருக்கிறார்.
“அதிமுக, பாஜக இடையே இணக்கமான உறவு ஏற்பட வேண்டும் என நான் எங்கேயும் சொல்லவில்லை. அது என் ஆசையும் இல்லை. திராவிட இயக்கமாக நாம் நம்பிக் கொண்டிருக்கும் அதிமுக, பாஜகவால் பாதிக்கப்படக் கூடாது, செல்வாக்கை இழக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் தான் விமர்சிக்கிறோம்.
“அதிமுக வலுவாக இருந்தால் பாஜகவால் காலூன்ற முடியாது. பாஜக காலூன்றினால் விசிகவுக்கோ, திருமாவளவனுக்கோ பாதிப்பு என்ற எண்ணம் அல்ல. “ஒட்டு மொத்தமாக தமிழ் சமூகம் பாதிக்கும் என்ற அச்சம் இருக்கிறது. அதிமுக மீது எனக்கு பகை உணர்ச்சியோ, வெறுப்பு உணர்ச்சியோ இல்லை,” என்றார் திருமாவளவன்.
பாமக, தேமுதிக ஆகியவை பாஜகவோடு இருந்தபோது தாம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், அதிமுகவை தோழமை இயக்கமாக கருதுவதால்தான் கூட்டணி குறித்து விமர்சிக்க நேரிட்டது என்றும் தோழமை வேண்டாம் என அதிமுக கருதினால் தாம் கருத்து தெரிவிக்க வாய்ப்பில்லை என்றும் திருமாவளன் மேலும் கூறினார்.