சென்னை: பாடத்திட்டத்தில் வேற்று மொழிகளின் ஆதிக்கம் இருப்பதால், தமிழைக் கற்க வேண்டிய மாணவர்களிடையே தமிழ் மீதான தாக்கம் குறைந்து வருகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கவலை தெரிவித்துள்ளார்.
தமிழ்மொழியைப் பேசுவதும், அதைப் பாதுகாப்பதும், அதன் அருமையைத் தூக்கிப் பிடிப்பதும் தமிழர்களாகிய நமது கடமை என்று நீதிபதி வெங்கடேஷ் கூறியுள்ளார்.
எந்தவொரு மொழியையும் தமிழன் எதிர்க்கவில்லை, பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவன். அதே வேளையில், என்மீது வேறொரு மொழியைத் திணித்தால் அதை ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்று உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
சீர்மிகுசட்டப் பள்ளியின் மாதிரி வழக்காடு மன்றம், ராகேஷ் சட்ட அறக்கட்டளை இணைந்து நடத்தும் 3வது தேசிய குற்றவியல் விசாரணை வழக்குரைப் போட்டி சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் நடந்தது. இதன் நிறைவு விழாவில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, மனிதனின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் மொழியே முதல் இடத்தில் உள்ளது.
உலகில் 6,000 மொழிகள் பேசப்பட்டாலும் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, தமிழ், சீனம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளே 2,000 ஆண்டுகளைக் கடந்தவை. அதிலும் சில மொழிகள் இப்போது வழக்கில் இல்லை. ஆனால் 3,500 ஆண்டுகளைத் தாண்டி நிற்கும் ஒரே மொழி தமிழ் என்பது கீழடி அகழாய்வில் நிரூபணம் ஆகியுள்ளது.
எந்த அரசனையோ, இறைவனையோ, மதத்தையோ உயர்த்திப் பிடிக்காத திருக்குறளில், ஒவ்வோர் அறக்கூற்றையும் நுட்பமாகச் சொல்ல முடிந்தது என்றால் 2,000 ஆண்டு முந்தைய தமிழனின் வளர்ச்சியை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அண்மையில், வெளியான ‘பராசக்தி’ படத்தை மகனுடன் சென்று பார்த்தேன். ‘தமிழகத்தில் மொழிப் போராட்டம் நடந்தது தெரியுமா’ என்று அவனிடம் கேட்டதற்கு, அவன் தெரியாது என்றான். அதைச் சொல்லித்தராமல் கடமையில் இருந்து தவறியதற்கு வேதனை அடைந்தேன், மொழிப் போராட்டம் பற்றி அனைவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
பாடத்திட்டத்தில் வேற்று மொழிகள் ஆக்கிரமிப்பு
பாடத்திட்டத்தில் வேறு மொழிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கியதால், மாணவர்களிடம் தமிழ் மீதான தாக்கம் குறைகிறது. தமிழன் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. மாறாக, விரும்பிப் படிக்கிறான். என் தமிழ் மொழியின் தொன்மை, செருக்கு காரணமாக, மற்றவர்கள் ஒரு மொழியை என் மீது திணித்தால் ஒருபோதும் அதை ஏற்கமாட்டேன். மொழிக்கு இழுக்கு வரும்போது, உங்கள் குரல் உயர வேண்டும். தமிழ் மொழியைப் பேசுவதும், பாதுகாப்பதும், அதன் அருமையை தூக்கிப் பிடிப்பதும் நம் கடமை.
விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன், முன்னாள் நீதிபதி வி.பாரதிதாசன், ராகேஷ் சட்ட அறக்கட்டளைத் தலைவர் என்.ஆர்.இளங்கோ, மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், மாதிரி வழக்காடு மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வே.பாலாஜி, பல்கலைக்கழக பதிவாளர் கவுரி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

