சென்னை: கடந்த சில நாள்களாக சென்னையில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் வாடிக்கையாளர்களின் வருகை ஏறக்குறைய 25 முதல் 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் கடந்த வாரம் முதல் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயுக் கலன்களுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து, பல உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன.
இதனால் வெளிமாநில ஊழியர்கள், கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விலையில் உணவு கிடைக்காமல் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதையடுத்து, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் வாடிக்கையாளர்கள் வருகை கணிசமாக அதிகரித்துள்ளது. அண்ணா நகர், கொரட்டூர் போன்ற பகுதிகளில் இயங்கி வரும் அம்மா உணவகங்களின் விற்பனை உயர்ந்துள்ளது.
பொதுமக்கள் வருகை அதிகரிப்பால், தடையின்றி உணவளிக்க போதிய எரிவாயுக் கலன் இருப்பை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், உணவு வகைகளின் தரம் குறையக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

