செங்கல்பட்டு: தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிகள், குடியிருப்புகளில் காவல்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.
மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, வல்லாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர் ஆகிய பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.
பொத்தேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், மாணவர் விடுதிகளில் அதிக அளவில் தங்கி வருகின்றனர். அந்த இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், மாணவர்களுக்குப் போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் தாம்பரம் காவல்துறையினர்க்குப் புகார்கள் வந்தன. அதையடுத்து, அப்பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
அண்மையில் கல்லூரி மாணவர் ஒருவர் சக மாணவரை ‘ஏர்கன்’ துப்பாக்கியால் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், மாணவர்களுக்குப் போதைப்பொருள்கள் விற்பனை செய்ததாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்குப் போதைப்பொருள் விற்பவர்களைக் கண்டறிந்து கைது செய்வதற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் காவல்துறை அப்பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.


