சென்னை: சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி) நலவாழ்வு நிலையத்துக்குத் தொழில் சார்ந்த சுகாதாரம், பாதுகாப்பு மேலாண்மைக்கான அனைத்துலகத் தரச்சான்றை டியுவி நார்ட் குழுமம் வழங்கியுள்ளது.
மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில், நலவாழ்வு நிலையத்துக்காக இச்சான்றைப் பெற்ற முதல் நிறுவனம் சென்னை ஐஐடி என அதன் இயக்குநர் வீ. காமகோடி தெரிவித்தார்.
இதற்கிடையே, இந்தியக் கல்வி அமைச்சின் மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி திட்டத்தின்கீழ், தென்னிந்திய மாநிலப் பேராசிரியர்களுக்கான இரண்டு நாள் மனநல வாழ்வுப் பயிலரங்கம் சென்னை ஐஐடியில் நடைபெற்றது.
மேற்குறிப்பிடப்பட்ட திட்டத்தின் மூலம் இதுவரை 3,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பயனடைந்ததாகப் பயிலரங்கின் தொடக்க விழாவில் பேசிய கல்வி அமைச்சக இணைச் செயலர் ரீனா சோனோவால் கவுலி கூறினார்.
மேலும், சென்னை ஐஐடி பேராசிரியர் சத்யநாராயணா கும்மாடி மாணவர் நலன் குறித்து மாணவர் ஆதரவு மாற்றத்துக்கான பயணம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

