வலுவிழந்துவிட்டதால் கூட்டணிக்கு அதிமுக சம்மதிக்கவில்லை: நயினார் நாகேந்திரன்

2 mins read
5c9d2e2f-6296-43a3-8b81-95953c82d025
நயினார் நாகேந்திரன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் வலுவிழந்துவிட்டதால்தான் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக தலைமை முன்வந்ததாகக் கூறப்படுவதை முற்றிலும் மறுப்பதாக பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக வலுவான கட்சி என்பதில் யாருக்​கும் சந்​தேகம் இல்​லை என்றும் எந்தக் கட்சியையும் கூட்டணிக்குள் இழுக்க வேண்​டிய அவசி​யம் பாஜகவுக்கு இல்​லை என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“திமுகவை ஆட்​சியி​லிருந்து இறக்​கு​வதற்​காக அமைந்​துள்ள எங்​கள் கூட்டணி அதன் நோக்​கத்​தில் வெற்றி பெறு​வது உறு​தி.

“எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் சீமான், விஜய் கட்சிகளை பாஜக பக்கம் இழுக்க திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

“பாஜகவைப் பொருத்தவரை வரும் சட்​டமன்றத் தேர்​தலில் திமுக ஆட்சியை அகற்​று​வதையே ஒரே இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. அந்த வகை​யில், தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இணைய விரும்​பும் கட்சிகளை வரவேற்​கிறோம்.

“தேர்தல் பிரசாரம் எப்போது தொடங்கும் என்பது குறித்து கூட்​ட​ணிக் கட்சிகளு​டன் கலந்து பேசி ஆலோ​சனை செய்து முடி​வெடுப்​போம். தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் முதல் பிர​சா​ரக் கூட்​டம் பிரம்​மாண்​ட​மாக இருக்கும்,” என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அதிமுக, பாஜக இடையே கூட்டணி உருவான பின்னர் பேட்டியளித்த மூத்த செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே, கூட்டணி ஆட்சிக்கு அதிமுக தலைமை சம்மதித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அதிமுக வட்டாரங்களில் சலசலப்பு நிலவியது. முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நயினார் நாகேந்திரனும் கூட்டணி ஆட்சி குறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்