சாத்தூர்: வெம்பக்கோட்டை அகழாய்வின்போது நாள்தோறும் ஏதேனும் முக்கியமான தொல்லியல் பொருள்கள் தொடர்ந்து கிடைத்து வருவது ஆய்வாளர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
அந்த வகையில், வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது பழங்கால நட்சத்திர வடிவிலான ஆபரணம் கண்டெடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இந்த ஆபரணம் பெண்கள் அணியக்கூடியதாக தெரிகிறது என்றும் ஒருவித எலும்பால் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.
மேலும், நட்சத்திர வடிவிலும் மஞ்சள் நிறத்திலும் காணப்படும் இந்த ஆபரணம், பார்த்தவுடன் மனதைக் கவரும் வகையில் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“இது போல் நீள்வட்ட வடிவில் கலைநயத்துடன் கூடிய சுடுமண் பொருள் ஒன்றும் கிடைத்துள்ளது. இதையும் பழங்காலத்தில் பெண்கள் ஆபரணமாக பயன்படுத்தி இருக்கக்கூடும்,” என்று ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
வெம்பக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் பல்வேறு பழங்கால ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே, இந்தப் பகுதியில் ஆபரணங்கள் செய்யும் தொழிற்சாலை இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

