சென்னை: குறைந்த நாள்களில் அதிக அறுவை சிகிச்சை செய்து கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
சென்னை கிண்டியிலுள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் படுக்கைகளுடன் ‘கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை’ கட்டப்பட்டுள்ளது.
மொத்தம் ஏழு தளங்களுடன், 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அம்மருத்துவமனையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2023 ஜூன் 15ஆம் தேதி திறந்துவைத்தார்.
இந்நிலையில், அம்மருத்துவமனையில் ஆறு மாதங்களில் 1,000 பேருக்கு ரத்தநாள அடைப்பைச் சரிசெய்யும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அதிநவீன வசதிகள் கொண்ட அம்மருத்துவமனையின் இதயவியல் துறையானது, ஆறு மாதங்களில் 30,000க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்துள்ளது. அதுபோல், ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஆஞ்சியோ சிகிச்சை, ஆஞ்சியோபிளாஸ்டி, பேஸ்மேக்கர் கருவி பொருத்தி, அத்துறை சாதனை படைத்துள்ளது.
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை இதயவியல் துறையில் மட்டும் இதுவரை ரூ.40 கோடி மதிப்பிலான சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.


