சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரக் காலம் திங்கட்கிழமை (மே 4) தொடங்கியது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது.
இந்நிலையில் கத்திரி வெயில் தொடங்கியதை அடுத்து, சராசரி வெப்பநிலை வழக்கத்தைவிட ஐந்து டிகிரி ‘ஃபாரன்ஹீட்’ வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அதேசமயம் சில மாவட்டங்களில் மே 9ஆம் தேதி வரை கோடை மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கோடை வெயில் காலம் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் இந்த நாள்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
ஏற்கெனவே பல்வேறு நகரங்களில் அன்றாட வெயிலின் அளவு 104 ‘ஃபாரன்ஹீட்’ஆகப் பதிவாகிவரும் நிலையில், பகலில் கடும் வெயிலும் மாலை, இரவு நேரங்களில் கடும் புழுக்கமும் நிலவி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

