சிவகங்கை: கீழடி அகழாய்வுத் தளத்தில் பழங்காலத் தமிழர்களின் நீர் மேலாண்மைத் திறனுக்கு மேலும் ஒரு சான்றாக எட்டு அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது 11ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு வாழ்ந்த சங்ககால மக்கள் குடிநீர், பாசனம், சாயத்தொழில் தேவைகளுக்காக உறைகிணறுகளைப் பயன்படுத்தி உள்ளனர்.
முந்தைய அகழாய்வுகளில் இரண்டு முதல் ஏழு அடுக்குகள் கொண்ட உறைகிணறுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்றுவரும் அகழாய்வில் எட்டு அடுக்குகள் கொண்ட உறைகிணறு வெளிப்பட்டுள்ளது.
ஒரே குழியில் அடுத்தடுத்து மூன்று வகையான வடிகால் அமைப்புகளும் சேதமடையாத நிலையில் இந்த எட்டு அடுக்கு உறைகிணறும் கண்டறியப்பட்டுள்ளது தொல்லியல் ஆர்வலர்கள் இடையே பேரார்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் ஆழத்தில் மேலும் சில அடுக்குகள் இருக்க வாய்ப்புள்ளதால், தொடர்ச்சியாக அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


