கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

கோப்புப்படம்: ஊடகம்

11 Jul 2025 - 3:56 pm

1 mins read

சென்னை: கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் எதிரான போக்கையும், தமிழ் நாட்டின் மீது நியாயமான உணர்வின்றி நடந்துகொள்ளும் நிலைப்பாட்டையும் மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

முக்கியமாக, தமிழர்களின் தொன்மையை மூடி மறைக்கும் நோக்கில், கீழடி விவகாரத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருவதை தமிழ் நாடு முதலமைச்சர் மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

கீழடியில் கிடைத்த தொல்பொருள்கள் எல்லாம், தமிழ்நாட்டு அரசின் வாயிலாக உலகத் தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இப்போது, கீழடி குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகளைத் தெரிவித்த ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் மூலம் மூன்றாம் கட்ட அகழாய்வு குறித்து மத்திய அரசு கருத்து கேட்டிருப்பது அதன் உள்நோக்கத்தை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது என்றார் தங்கம் தென்னரசு.

கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில், தமிழக மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்