சென்னை: தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு ‘ஏஐ’ தொழில்நுட்பத்துடன் மடிக்கணினி வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் குறிப்பிட்டார்.
முன்னணி நிறுவனங்களிடம் இருந்து மடிக்கணினிகளை அரசு வாங்க இருப்பதாக தெரிவித்த அவர், இந்த இலவச மடிக்கணினிகளில் ஆறு மாதங்களுக்கு ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை கட்டணமின்றிப் பயன்படுத்த முடியும் என்றார்.
“காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்களால் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது. கல்லூரி மாணவர்களின் கல்விக் கனவை எப்படி சிதைக்கலாம் என சிந்திப்பதை எடப்பாடி கைவிடவேண்டும்.
“திராவிட மாடல் 2.0 அரசு அமையும்போது மாணவர்களுக்கு பயனளிக்கும் இன்னும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். சில வாரங்களில் மடிக்கணினி வழங்க உள்ள நிலையில் பழனிசாமியின் நோக்கம் என்ன என்று மக்களுக்குத் தெரியும்,” என்றார் உதயநிதி ஸ்டாலின். திமுக அரசு எதிர்வரும் பிப்ரவரி மாதத்துக்குள் பத்து லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் என்று குறிப்பிட்ட அவர், இதன் மூலம் தமிழக மாணவர்களின் கல்வி முன்னேற்றம் அடுத்த கட்டத்தை எட்டும் என்றார்.

