சென்னை: சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு, மகளிர் மருத்துவமனையில் பச்சிளங்குழந்தை பாதுகாப்புப் பெட்டகம் வழங்கும் திட்டத்தையும் ‘தாய்மை’ செயலியையும் தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) அறிமுகப்படுத்தினார்.
தாய்-சேய் நலனை மேம்படுத்தும் நோக்கில், பேறுகால, குழந்தைப் பராமரிப்பிற்கான ‘தாய்மை’ செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து தாய்மார்களுக்குப் பச்சிளங்குழந்தைப் பாதுகாப்புப் பெட்டகத்தையும் அவர் வழங்கினார்.
8.07 கோடி ரூபாய் செலவில் பச்சிளங்குழந்தைப் பாதுகாப்புப் பெட்டகம் வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்துவதற்கு இரும்புச்சத்து, வைட்டமின் சொட்டு மருந்துகள் ஆகியவை அடங்கிய பெட்டகம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ரூ.8.07 கோடியில் அத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தாய்-சேய் நலச் சேவைகளை வலுப்படுத்தும் முக்கிய முன்னெடுப்பாக ‘தாய்மை’ எனும் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிகள் பதிவுசெய்யப்படும் தளத்திலிருந்து பேறுகாலப் பரிசோதனைகள், மகப்பேறு, மகப்பேற்றுக்குப் பிந்தைய பராமரிப்பு, குழந்தை வளர்ச்சி, தடுப்பூசி போன்றவை அந்தச் செயலியின்மூலம் கண்காணிக்கப்படும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் தாய்-சேய் நலனைப் பாதுகாக்க செயலி தொடங்கப்பட்டுள்ளது.

