தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெற்றிபெறத் தகுதி உள்ளோருக்கே சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு: ஸ்டாலின்

2 mins read
fe85bfc2-bc14-4c1d-802c-88950a06f01a
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், வெற்றிபெறத் தகுதி உள்ளோருக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மே 3ஆம் தேதி (சனிக்கிழமை) காலை நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் திமுக பொதுக்குழு கூட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முக்கியமாக மதுரையில் வருகிற ஜூன் 1ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் 1,244 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மேலும் பேசுகையில், “வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்பதை தலைமை முடிவு செய்யும். வெற்றி பெறுபவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவர்.

“தகுதியானவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றிபெற உழைக்க வேண்டியது மாவட்டச் செயலாளர்களின் கடமை. தடங்கல் என்பது எப்போதும் இருக்கும். அதனை உழைப்பால் வெல்லுங்கள்.

“அமைச்சர்கள் சென்னையில் இருப்பதைவிட பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று பணியாற்ற வேண்டும். எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் செல்ல வேண்டும்.

“நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான். இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்தக் கட்டமைப்பை காலந்தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம், இருக்க வேண்டும்.

“அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது. தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற பாஜக அனைத்துவிதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கிவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கும் வேறு வழியில்லை.

“பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவரது தலைமைக்கே சிக்கல் வந்துவிடும் என பயப்படுகிறார்.

“அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், மிரட்டல்கள் மூலம் அசிங்கப்படுத்த நினைப்பர். அவர்களின் அரட்டல், மிரட்டல், உருட்டல்களுக்கான உண்மையான காரணம் மக்களுக்குத் தெரியும். எனவே, இந்த அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்,” என்றார் ஸ்டாலின்.

குறிப்புச் சொற்கள்