சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் இரண்டு நாள்களில் மட்டும் ரூ.435 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
தமிழகத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நாள்தோறும் சராசரியாக ரூ.150 கோடி மதிப்புள்ள மதுவகைகள் விற்பனையாகின்றன. விடுமுறை நாள்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி நான்கு நாள்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால் ஏராளமானோர் சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாடினர்.
16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதால் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. அதனால், மதுப்பிரியர்கள் பொங்கல் அன்றும் அதற்கு முந்தைய நாளும் வழக்கத்தைவிட கூடுதலாக மதுவகைகளை வாங்கிச் சென்றனர்.
இதனால், கடந்த 14ஆம் தேதி ரூ.184 கோடிக்கும் 15ஆம் தேதி பொங்கல் நாளன்று ரூ.251 கோடிக்கும் மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன.
பொங்கலன்று சென்னை மண்டலத்தில் மட்டும் ரூ.57 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. திருச்சியில் ரூ.50 கோடி, மதுரையில் ரூ.54 கோடி, சேலம் ரூ.46 கோடி, கோவையில் ரூ.45 கோடி என இரண்டு நாள்களில் மட்டும் ரூ.435 கோடி மதிப்புள்ள மதுபானங்கள் விற்பனையானதாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இதையடுத்து, கூட்டு வரி, ஆயத்தீர்வை வரி மூலம் தமிழக அரசுக்கு ரூ.350 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

